84 வருட தென்னிந்தியத் திரையுலக வரலாற்றில் பாகுபலி புதிய சாதனையை ஏற்படுத்தி விட்டதாக தெலுங்குத் திரையுலகினர் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஜுலை 10ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாகவும், ஹிந்தி உட்பட மற்ற மொழிகளில் டப்பிங் ஆகியும் வெளியான பாகுபலி படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துவிட்டதாக
டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாயைத் தாண்டியதாகவும் 5 நாட்களுக்குள் 200 கோடி ரூபாயைத் தாண்டியதாகவும் இதற்கு முன் வெளிவந்த தகவல்கள் தெரிவித்தன. இப்போது படம் வெளிவந்த 9 நாட்களுக்குள் 300 கோடி ரூபாய் என்பது மிகப் பெரும் சாதனை என்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடி மொத்தமாக 290 கோடி ரூபாயை வசூல் செய்ததாகச் சொல்கிறார்கள். அந்த சாதனையை 9 நாட்களுக்குள்ளாகவே பாகுபலி படம் முறியடித்து விட்டது.
ரஜினிகாந்த் அளவிற்கு பிரபாஸ் இல்லையென்றாலும், ஷங்கர் அளவிற்கு ராஜமௌலி இல்லையென்றாலும் இந்த பாகுபலி படத்தின் ஒட்டு மொத்த உருவாக்கம் உலகத்திலுள்ள பல சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் ராஜமௌலி இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
நான் முன்னரே சொன்னபடி பாகுபலி திரைப்படம் 500 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் சாதனை புரியும் என்றே டோலிவுட் வட்டாரத்தில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

0 comments:
Post a Comment